ராயபுரம்:
எண்ணூர் துறைமுகத்தில் கடந்த ஜனவரி 28-ந்தேதி 2 கப்பலல்கள் மோதியதில் கடலில் கச்சா எண்ணெய் கொட்டியது. எண்ணெய் படலம் எண்ணூரில் இருந்து மகாபலிபுரம் வரை பரவியது.
இதையடுத்து எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. சுமார் ஒரு மாதம் வரை இப்பணி நீடித்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட காசிமேடு மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு அறிவித்த நிவாரணத் தொகை பெரும்பாலான மீனவர்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி இன்று காசிமேடு சூரியநாராயணன் தெருவில் உள்ள மீன்வளத்துறை உதவி அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
அவர்கள் நிவாரண தொகை வழங்காததை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் மீன்வளத்துறை உதவி அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.