சென்னை:
தற்போது பண்டிகை காலம் தொடங்குவதால் சமையல் கியாஸ் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி, அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை போன்றவை வருவதால் உறவினர்கள் வருகை, பலகாரங்கள் செய்தல் போன்றவற்றால் கியாஸ் பயன்பாடு அதிகமாகும்.
அதனால் இந்த நேரத்தில் கியாஸ் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
பண்டிகை கால சிலிண்டர் தேவையை கருத்தில் கொண்டு கியாஸ் ஆயில் நிறுவனம் பாரத், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர் வழங்க வேண்டும் என்று கியாஸ் ஏஜென்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சிலிண்டர் பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும். தற்போது சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் சிலிண்டர் டெலிவரி தாமதமாக நடப்பதாக புகார்கள் வருகின்றன.
தீபாவளியை முன்னிட்டு பல வீடுகளில் பலகாரம் செய்வார்கள். அதனால் வழக்கத்தை விட வரும் நாட்களில் சிலிண்டர் தேவை அதிகரிக்கும்.
அதனால் வாடிக்கையாளர் பதிவு செய்ததும் விரைவாக சிலிண்டர் டெலிவரி செய்யுமாறு ஏஜென்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையாக இருந்தாலும் ஏஜென்சியினர் செயல்படுகின்றனர். குறிப்பிட்ட காலத்தை தாண்டிய தாமதம் குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அல்லது அவற்றின் இணையதளங்களில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.