விதை 
செய்திகள்

பாப்பான்குளம் அரசு விதைப்பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

கோ-8 ரக பாசிப்பயறு மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டதாகும்.

மடத்துக்குளம்:

மடத்துக்குளத்தை அடுத்த பாப்பான்குளத்தில் 26.86 ஏக்கர் பரப்பில் மாநில அரசு விதைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு நெல், பயறு வகைகள் உள்ளிட்ட பல்வேறு தானியங்களின் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு விதை உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் இங்கு விதை சுத்திகரிப்பு நிலையமும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட விதைகள் தரச்சான்று பெறப்பட்டு  தரமான விதைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

நடப்பு பருவத்தில் பாப்பான்குளம் விதைப்பண்ணையில் 4 ஏக்கரில் உயர்விளைச்சல் ரகமான கோ-8 பாசிப்பயறு விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. ஆதார நிலை-1 விதைப்பண்ணையான இதனை திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை துணை இயக்குனர்) ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள் கூறியதாவது:-

கோ-8 ரக பாசிப்பயறு மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டதாகும்.அத்துடன் குறைந்த அளவு நீரைக்கொண்டு 55 முதல் 60 நாட்களில் அதிக மகசூல் தரக்கூடியதாகும். அந்தவகையில் ஏக்கருக்கு 360 கிலோ வரை மகசூல் தரக்கூடியதாகும்.

எனவே இந்த ரக பாசிப்பயறு சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்.அத்துடன் விளைநிலத்தில் பாசிப்பயறு சாகுபடி செய்வதன் மூலம் இழந்த தழைச்சத்தை மீட்டெடுக்க முடிவதால் அடுத்த சாகுபடியில் உரத்தேவை குறையும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.