நொய்யல்:
கரூர் மாவட்டம், நொய்யல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் வெல்லத்தின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் இப்பகுதிகளில் அதிகளவு வெல்லம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆலைகளில் கலப்படம் செய்யப்பட்டு வெல்லம் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் டாக்டர் சசிதீபா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நொய்யல் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வெல்லம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், அதன் இருப்பு ஆகியவற்றை சரிபார்த்தனர். மேலும், தயாரிக்கப்பட்ட வெல்லத்தின் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர். ஆய்வின் முடிவில், வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தால் ஆலையின் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.