ஒரிசா வாலிபரை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்த போது எடுத்த படம். 
செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட ஒரிசா வாலிபர் பேஸ்புக் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சென்னை மடிப்பாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் திரிந்த ஒரிசா வாலிபரை போலீசார் பேஸ்புக் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். #Facebook

ஆலந்தூர்:

மடிப்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும்படி வடமாநில வாலிபர் ஒருவர் அலைந்து திரிவதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மடிப்பாக்கம் பஸ்நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அருகே வடமாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த மடிப்பாக்கம் போலீசார், அந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் திருடுவதற்காக வந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

உடனே அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவருடைய பெயர் தேவேந்திர பியான் (21). ஒரிசா மாநிலம் பலேசோர் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

தொடர்ந்து விசாரித்த போது ஒரு போன் நம்பரை சொன்னார். அதன்மூலம் அந்த வாலிபரின் ‘பேஸ்புக்’ தொடர்பை போலீசார் கண்டுபிடித்தனர். ஐ.டி.ஐ. படித்த இவர் 20-நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு பிட்டர் வேலைக்காக சென்றதும், அங்கு ஏமாற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்தநிலையில் கேரளாவில் ரெயில் ஏறி சென்னை வந்த அவர் மடிப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக் மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த தேவேந்திரபியான் உறவினரும், நண்பர்களும் ஒரிசாவில் இருந்து மடிப்பாக்கம் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் வாலிபர் தேவேந்திரபியான் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து மடிப்பாக்கம் போலீசாருக்கும், உறவினர்கள் வரும் வரை வாலிபருக்கு பாதுகாப்பு கொடுத்த தொண்டு நிறுவன பிரமுகர் நாராயணனுக்கும் வாலிபரின் உறவினரும் நண்பர்களும் நன்றி தெரிவித்தனர். #Facebook

SCROLL FOR NEXT