ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இதன் கரையோரத்தை ஆக்கிரமித்து குடிசை வீடுகள் அமைத்து 31 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் குடிமராமரத்து திட்டத்தின் கீழ் பேரண்டூர் ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. ஏரிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யக்கோரி அதிகாரிகள் ஏற்கனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை. இதையடுத்து ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகநாதன், துணை தாசில்தார் காதர்பர்வீன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் பிருத்வி பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் யுகந்தர், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் 31 ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்றினர்.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். அவர்களுக்கு அதே கிராமத்தில் உள்ள தோப்பு புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டிக்கொள்ள ஏற்கனவே தலா 1.50 சென்ட் நிலம் ஒதுக்கி இருப்பதாக தாசில்தார் முருகநாதன் தெரிவித்துள்ளார்.