செய்திகள்

பொறுப்பில் உள்ளவர்கள் சமூக வலைத்தளங்களை கவனமாக கையாள வேண்டும்: ஒபாமா அறிவுறுத்தல்

பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கு சிறப்பு பேட்டியளித்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் சமூக வலைத்தளங்களை கவனமாக கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த பதவியை ஏற்பதற்கு முன்னரும் தற்போதும் தனது கருத்துகளை டுவிட்டர் மூலம் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். சர்ச்சைக்குரிய பல கருத்துகளும் இதில் இடம்பெறுவதுண்டு.

சமீபத்தில், அமெரிக்க மக்களுக்கு டுவிட்டர் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்திருந்த டிரம்ப், பல ஆண்டுகளாக ஒபாமா வாயில் சிக்கி சிதைந்த ‘மெரி கிறிஸ்ட்மஸ்’ என்ற வார்த்தையை மீட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டிருந்தது, நினைவிருக்கலாம்.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் பிரபல ஒலி - ஒளிபரப்பு நிறுவனமான பி.பி.சி. குழுமத்துக்கு சொந்தமான பி.பி.சி.ரேடியோ 4 - அலைவரிசைக்காக பிரிட்டன் நாட்டின் வேல்ஸ் இளவரசர் ஹாரி கவுர நேர்காணலாளராக செயல்பட்டார். ஒபாமாவின் பேட்டி இன்று பி.பி.சி.ரேடியோ 4 - அலைவரிசையில் ஒலிபரப்பானது.

இன்றைய கவுரவ தொகுப்பாளராக பி.பி.சி.ரேடியோவில் நிகழ்ச்சிகளை இளவரசர் ஹாரி வழங்கி வருகிறார். இதற்காக, தனது தந்தை இளவரசர் சார்லஸ்-ஐயும் இவர் பேட்டி கண்டுள்ளார்.


இன்று ஒலிபரப்பான இந்த பேட்டியில் ‘மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் சமூக வலைத்தளங்களை பொறுப்பற்ற முறையில் கையாள கூடாது’ என டிரம்ப்பின் பெயரை குறிப்பிடாமல் ஒபாமா அறிவுறுத்தியுள்ளார்.