செய்திகள்

ஜெயலலிதாவை நாங்கள் பார்க்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டிருந்தது: ஓ.பன்னீர்செல்வம்

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த 74 நாட்களும் ஜெயலலிதாவை நாங்கள் பார்க்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டிருந்தது என தூத்துக்குடியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

மாலை மலர்

தூத்துக்குடி எம்.பி.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வரும், புரட்சி தலைவி அம்மா அ.தி.மு.க தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இரு பருவ மழைகள் பொய்த்து விட்டன. இதனால் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே விவசாயிகள் கேட்கும் நிவாரண தொகையை மத்தி-மாநில அரசுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் தற்போது அரசியல் காரணங்களுக்காக தனக்குரிய பாணியில் யாருமே சிந்திக்க முடியாத சில கருத்துக்களை கூறுவதை வாடிக்கையாகி வைத்துள்ளார். நான் முதல்வராக இருந்த போது மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை நடத்தினேன். அவர் மருத்துவமனையில் இருந்த 74 நாட்களில் எங்களால் ஜெயலலிதாவை பார்க்கமுடியாத சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.


மருத்துவ குழுவினர் அளிக்கும் தகவலை அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்கள் வெளியிட்டார்கள். அதனை நாங்கள் அப்படியே நம்பினோம். ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இன்னும் உள்ளது. இந்த சந்தேகங்களை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.