செய்திகள்

கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்திய மலையாள நடிகர் மீது வழக்கு

கேரள கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக தடை செய்யப்பட்ட பகுதியில் ஊர்வலம் நடத்திய மலையாள நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #KeralaNun #JoyMathew

மாலை மலர்

கேரள மாநிலம் கோட்டயம் குருவிலங்காட்டில் உள்ள கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வந்த பிராங்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கோழிக்கோட்டில் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில் மலையாள நடிகர் ஜாய்மேத்யூ என்பவர் பங்கேற்றார். அவர்கள் ஊர்வலம் அந்த பகுதியில் உள்ள மிட்டாய் தெரு வழியாக சென்றது. அந்த பகுதியில் ஊர்வலம் நடத்த ஏற்கனவே போலீஸ் தடை உள்ளது.

இந்த நிலையில் அந்த பகுதி வழியாக ஊர்வலம் சென்றதால் நடிகர் ஜாய் மேத்யூ உள்பட 24 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி நடிகர் ஜாய்மேத்யூ கூறும்போது, என்னை மிரட்ட போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். நாங்கள் ஊர்வலம் நடத்திய பாதை போலீஸ் தடை விதிக்கப்பட்ட இடம் என்பதை யாரும் தெரிவிக்கவில்லை என்றார். #KeralaNun #JoyMathew