வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து நேற்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையில் நேற்று எந்த அலுவலும் நடைபெறவில்லை. மக்களவையில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.