உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஹாப் சுக்லா. சி.ஆர்.பி.எப். எஸ்.ஐ.யான இவர், ஸ்ரீநகரில் கடந்த 24-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானார். அவரது மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக, கோரக்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கடந்த 8ஆம் தேதி சென்றார். அப்போது சுக்லா வீடு இருக்கும் தெருவில் இருந்து அவரது வீடு வரை முதல் மந்திரி செல்வதற்காக சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. வீட்டில் ஏசி மெஷின் மாட்டப்பட்டது. புது சோபாக்கள்
போடப்பட்டன. இதைதொடர்ந்து, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சுக்லா வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி 6 லட்சம் ரூபாய் வழங்கினார்.
இதேபோல், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் உத்திரப்பிரதேசம் மாநிலம் டியோரியா மாவட்டத்தை சேர்ந்த பி.எஸ்.எப். படைவீரரான பிரேம்சாகர் பலியானார். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பிரேம் சாகர் வீட்டுக்கு மே 12-ஆம் தேதி சென்று, அவரது குடும்பத்தினரிடம் 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.
முதல் மந்திரியின் வருகையை முன்னிட்டு, மாவட்ட அதிகாரிகள் வழக்கம்போல் ஆடம்பரமான தற்காலிக ஏற்பாடுகளை செய்திருந்தனர். முதல் மந்திரியின் இந்த வருகை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களை முதல் மந்திரி யோகி
ஆதித்யநாத் சந்திக்க சென்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, இனிமேல் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்ய வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏசி, சோபா, சிவப்பு கம்பள வரவேற்பு, அலங்கார நாற்காலி என எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இன்றி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அனைவரையும் சந்திப்பார்’’ என தெரிவித்துள்ளது.