செய்திகள்

வாழ்க்கை துணைவரின் வருமான ஆதாரத்தை குறிப்பிட வேண்டும்: தேர்தல் கமிஷன் உத்தரவு

வேட்பு மனுதாக்கலின்போது வாழ்க்கை துணைவருக்கு கிடைக்கும் வருமானம் தொடர்பான ஆதாரத்தையும் பிரமாண பத்திரத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

தேர்தலை வெளிப்படையாக நடத்த தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வேட்பாளர் தான் மற்றும் தனது வாழ்க்கை துணைவரின்(கணவன் அல்லது மனைவி) வருமான ஆதாரம் ஆகியவற்றை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் கட்டாயம் குறிப்பிடும் விதமாக தேர்தல் விதிகளை திருத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்தை கடந்த ஆண்டு தேர்தல் கமிஷன் கேட்டு கொண்டிருந்தது. இதை சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை கடந்த மாதம் 17-ந்தேதி அறிவிக்கையாக வெளியிட்டது.

இதையடுத்து, இந்த புதிய விதிமுறையை தேர்தல் கமிஷன் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. எனவே இனி நடைபெறும் தேர்தல்களில் வேட்பாளர் திருமணம் ஆனவராக இருந்தால் அவர் தனது வாழ்க்கை துணைவருக்கு கிடைக்கும் வருமானம் தொடர்பான ஆதாரத்தையும் பிரமாண பத்திரத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும். இந்த தகவலை நிரப்புவதற்காக தான் மற்றும் தனது வாழ்க்கை துணைவரின் வருமான ஆதாரங்கள் என்னும் ஒரு பத்தி பிரமாண பத்திரத்தில் சேர்க்கப்படுகிறது.

தற்போதுள்ள விதிமுறைப்படி வேட்பாளர் தான், தனது வாழ்க்கை துணைவர், தன்னை சார்ந்துள்ள 3 பேரின் சொத்து மற்றும் கடன்கள் விவரங்களை தெரிவித்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.