செய்திகள்

வந்தே மாதரம் பாடாமல் போனால் தவறென்ன?: மத்திய மந்திரி காரசார கேள்வி

வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அந்த பாடலை பாடாமல் போனால் தவறு என்ன? என மத்திய மந்திரி கேள்வி எழுப்பி உள்ளார்.

மாலை மலர்

தானே:

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் வந்தே மாதரம் பாடலை வாரம் ஒருமுறையாவது கட்டாயமாக பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின்  கருத்தை மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரும் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அந்த பாடலை பாடாமல் போனால் தவறு என்ன? என மத்திய மந்திரி கேள்வி எழுப்பி உள்ளார்.

தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே பங்கேற்றார். அப்போது வந்தே மாதரம் பிரச்சனை சமூகங்களுக்கிடையே சர்ச்சையை தூண்டி விடுவதற்காக தற்போது எழுப்பப்ட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அனைவருமே வந்தே மாதரம் பாடலை பாடவேண்டும். ஆனால் பாடாமல் போனால் என்ன தவறாகிவிடும்? வந்தே மாதரத்தை பாடாமல் போவதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறினார்.