செய்திகள்

டுவிட்டரில் மனுஷி சில்லரை கிண்டல் செய்த சசிதரூர் - எதிர்ப்பு எழுந்ததால் மன்னிப்பு கோரினார்

உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லரை டுவிட்டரில் கிண்டல் செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் எனது கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால், மன்னிப்பு கோருகிறேன் என கூறியுள்ளார்.

புதுடெல்லி:

அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றுள்ளார். இதுபற்றி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் எம்.பி., ‘சில்லர்’ என்ற வார்த்தையை சில்லரை என்ற பொருளில் குறிப்பிட்டு கிண்டல் செய்தார்.

தனது ‘டுவிட்டர்’ பதிவில், “நமது ரூபாயை பணமதிப்பு நீக்கம் செய்தது தவறு. நமது பணம்தான் உலகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை பா.ஜனதா உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். நமது சில்லர் (சில்லரை) கூட உலக அழகி ஆகிவிட்டதே?” என்று அவர் கூறி இருந்தார்.

இதற்காக தேசிய பெண்கள் ஆணையம் சசிதரூருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. “நாட்டுக்கு பெருமை சேர்த்த ஒரு பெண்ணின் சாதனையை சசிதரூர் சிறுமைப்படுத்தி விட்டார். தனது சொந்த மகளை அவர் சில்லரை என்று சொல்வாரா? அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு ‘சம்மன்’ அனுப்பி நாங்கள் விசாரிப்போம்” என்று தேசிய பெண்கள் ஆணையம் கூறியது.

இதையடுத்து, சசிதரூர், தனது மற்றொரு பதிவில் மன்னிப்பு கோரினார். “அந்த இளம்பெண்ணை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அவர் அளித்த பதிலை நான் தனியாக பாராட்டி இருக்கிறேன். இருப்பினும், எனது கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால், மன்னிப்பு கோருகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.