நோட்டா (கோப்புப்படம்) 
செய்திகள்

நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பா.ஜனதா கட்சித்தலைவரும், வழக்கறிஞருமான அஷ்வினி குமார், நோட்டா அதிக வாக்குகள் பெற்றால், திரும்பவும் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாலை மலர்

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிடில், வாக்களிக்காமல் இருப்பதை தவிர்க்கும் வகையில் நோட்டோ என்ற வாய்ப்பை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. ஆனால் நோட்டோ அதிக வாக்குகள் பெற்றாலும், அதற்கு அடுத்தப்படியாக அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் நோட்டோ கொண்டு வந்ததற்கான முக்கிய நோக்கம் சிதைக்கப்படுவதாக விமர்சனம் எழும்பியது.

தற்போது தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் பா.ஜனதா தலைவரும், வழக்கறிஞருமான அஷ்வினி குமார் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் ‘‘ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளர்களை விட நோட்டோ அதிக வாக்குகள் பெற்றால், தேர்தல் முடிவை ரத்து செய்து, புதிதாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் இதற்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.