செய்திகள்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை லட்சிய தி.மு.க.வால் மட்டுமே நிரப்ப முடியும்: டி. ராஜேந்தர் பேட்டி

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை லட்சிய தி.மு.க.வால் மட்டுமே நிரப்ப முடியும் என்று டி.ராஜேந்தர் கூறினார்.

மாலை மலர்

கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் வடமதுரையில் லட்சிய தி.மு.க.வின் மகளிரணி கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சித்ரா தலைமை வகித்தார். நிர்வாகிகள் காளிதாஸ், ஜாக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் டி.ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ் டிக் முட்டை வருவது ஆபத்தானது. பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு வேண்டும். இல்லையென்றால் வரும் சந்ததிகள் அவதிப்பட நேரிடும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. லட்சிய தி.மு.க. நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் அதிகம் கலந்து கொள்கிறார்கள். மக்களின் உற்சாக எழுச்சியின் காரணமாக கட்சியின் செல்வாக்கு வெகுவாக உயர்ந்து விட்டது.

இதனால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை லட்சிய தி.மு.க.வால் மட்டுமே நிரப்ப முடியும். உள்ளாட்சி தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் லட்சிய தி.மு.க. போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.