தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில்கள் கடந்த 2002-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் மெட்ரோ ரெயில் பாதையை விரிவாக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான பணிகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகல் நடைபெற்ற விழாவில் நொய்டா நகரில் உள்ள தாவரவியல் பூங்காவை டெல்லியில் உள்ள கல்காஜி மந்திர் பகுதியுடன் இணைக்கும் 12.5 கி.மீட்டர் தூரம் கொண்ட புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்நிலையில், டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியா தனது டுவிட்டரில், 'டெல்லி மெட்ரோ ரெயில் தொடக்க விழாவிற்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அழைக்கபடாதது டெல்லி மக்களை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. இந்த விழாவிற்கு வந்தால் கெஜ்ரிவால் மெட்ரோ ரெயில் டிக்கெட்டின் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுவார் என்ற பயத்தில் தான் அவர் அழைக்கப்பட வில்லை' என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பா.ஜ.க.விற்கு எதிராக டுவிட் செய்து வருகின்றன. மெட்ரோ ரெயில் தொடங்கியதற்கான அனைத்து நன்மதிப்பையும் நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் டிக்கெட் விலையை மட்டும் குறையுங்கள் என கூறியுள்ளனர்.