நகைகள் மீட்பு 
செய்திகள்

வட மாநில வாலிபர்கள் கைது - பயணிகளிடம் கொள்ளையடித்த நகைகள் மீட்பு

ரெயில் பயணிகளிடம் கொள்ளையடித்த வட மாநில வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 65 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் நகைகள் அடிக்கடி திருடு போவதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து போலீசார் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். கடந்த 6-ந்தேதி சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நின்ற 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர்கள் டெல்லி மற்றும் அரியானாவை சேர்ந்த ராஜேந்திரகுமார், மதன்லால், ராம்தியா, சுனில்குமார், சுரேஷ்குமார் என்பதும், சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும், ஓடும் ரெயில்களிலும் பயணிகளிடம் தொடர் கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது.

அவர்களை போலீசார் கைது செய்து 25 சவரன் தங்க கட்டியை பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அவர்கள் 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கொடுத்த தகவலின்படி 65 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.