சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்ட சிறுவன். 
செய்திகள்

திருப்பூரில் குழந்தைகளை சூடு வைத்து சித்ரவதை செய்த வடமாநில தம்பதி

திருப்பூரில் சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்ட ஒடிசா மாநில குழந்தைகள் மீட்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின் இரு குழந்தைகளும் அனுப்பர்பாளையத்தில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பூர்:

திருப்பூர்-தாராபுரம் ரோடு கே. செட்டிப்பாளையம் சுப்பிரமணியம் காம்பவுண்டு பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதி இரு குழந்தைகளுடன் வந்தனர்.

அவர்கள் குழந்தைகளை அடித்து சித்ரவதை செய்து வந்தனர். குழந்தைகளின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 4 வயதுள்ள சிறுவன், இரண்டரை வயதுள்ள சிறுமி ஆகிய இரு குழந்தைகளின் உடலில் பல இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்த காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக தம்பதியிடம் விசாரித்த போது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. போலீசாருக்கு தகவல் அளிக்க போவதாக கூறியதால் குழந்தைகளை விட்டு விட்டு அங்கிருந்து தப்பினர்.

இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளிர் போலீசார் அங்கு விரைந்து வந்து இரு குழந்தைகளையும் மீட்டனர். விசாரணையில் தப்பி சென்றது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ்- பிஜிலு என்பது தெரிய வந்தது.

இருவரும் அக்குழந்தைகளின் பெற்றோரா? அல்லது வேறு நபர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிகிச்சைக்கு பின் இரு குழந்தைகளும் அனுப்பர்பாளையத்தில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.