செய்திகள்

வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்கிறது. கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.

வட, தென் தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழ்நாடு, இலங்கையை ஒட்டியுள்ள கடற்கரைக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அதேபோல், தென் தமிழகத்திலும் இடியுடன் கூடிய லேசான மழை ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் தெளிவாக காணப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘குளச்சல், தக்கலையில் தலா 7 செ.மீ., காஞ்சீபுரம், ஓமலூர், ஆலங்காயம், போளூரில் தலா 4 செ.மீ., சேலம், குழித்துறை, செங்கம், சங்கராபுரத்தில் தலா 3 செ.மீ., சாத்தனூர் அணை, குடியாத்தம், மயிலம், ஆர்.கே.பேட்டை, மரந்தஹள்ளி, ஆத்தூர், இரணியல், வந்தவாசி, நாகர்கோவில், ஏற்காட்டில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.