செய்திகள்

வடகிழக்கு பருவ மழை மேலும் 5 நாட்கள் தாமதம்

வடகிழக்கு பருவ மழை இன்னும் 5 நாட்களுக்குப் பிறகுதான் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon #Rain

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையின் போதுதான் அதிக மழை கிடைக்கும்.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை முடிந்ததும் வட கிழக்கு பருவமழை அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்கும். ஆனால் தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தம் காரணமாக இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது. ஆனால் பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம் எற்பட்டுள்ளது. இன்னும் 5 நாட்களுக்குப் பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வருகிற 29-ந்தேதி புதிதாக காற்றழுத்த பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Northeastmonsoon #Rain