போலீசார் விசாரணை 
செய்திகள்

வடமாநில பெண் கற்பழித்து கொலை- தலைமறைவான காதலனுக்கு வலைவீச்சு

படப்பை அருகே வீட்டில் தனியாக இருந்த வடமாநில பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீசார் அவருடைய காதலனை தேடி வருகின்றனர்.

மாலை மலர்

படப்பை:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கர்ணா பிரியதர்ஷினி (20). இவருடைய தோழி ரஞ்சிதா குமாரி ஷாகு(23). இவர்கள் 2 பேரும் படப்பையை அடுத்த ஆதஞ்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். ஒரகடத்தில் உள்ள ராயல் என்பீல்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் ரஞ்சிதா குமாரி சாகு காலையில் வேலைக்கு சென்று விட்டார். கர்ணா பிரியதர்ஷினி வேலைக்கு போகாமல் தனியாக வீட்டில் இருந்தார்.

மாலையில் ரஞ்சிதா குமாரி ஷாகு திரும்பி வந்தபோது கர்ணா பிரியதர்ஷினி ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

போலீஸ் விசாரணையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது. மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் நட ராஜன், விநாயகம் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட கர்ணா பிரியதர்ஷினிக்கு ஒரு காதலன் இருப்பது தெரிய வந்தது.

ஒடிசாவை சேர்ந்த மனிஸ் (23) என்பவரை 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அவர் சோழிங்கநல்லூரை சேர்ந்த சிறுசேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வது தெரியவந்தது.

கடந்த சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்ணா பிரியதர்ஷினி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு மனிஷ் தலைமறைவாகி விட்டார். அவருடைய செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது.

எனவே, கர்ணா பிரியதர்ஷினியின் காதலன் அந்த கொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். எனவே அவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விரைவில் மனிஷ் சிக்குவார். அதன் பிறகு கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.