செய்திகள்

தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம்

தென்கொரியா நாட்டின் பியங்சாங் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

டோக்கியோ:

தென்கொரியா நாட்டின் பியங்சாங் நகரில் வரும் 9-2-2018 முதல் 25-2-2018  குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. தென்கொரியாவின் தீவிர பகை நாடான வடகொரியா இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்குமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கிய நிலையில் புத்தாண்டு அன்று தொலைக்காட்சியில் உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடகொரியா தனது அணியை அனுப்பும் என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரண்டாடுகளாக துண்டிக்கப்பட்டிருந்த தென்கொரியா நாட்டுடனான ‘ஹாட்லைன்’ தொலைபேசி வசதியை இருநாடுகளின் எல்லைப்பகுதியில் வடகொரியா சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வடகொரியா நாட்டு பிரதிநிதி சாங் உங், சீன தலைநகர் பீஜிங் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா அணிகள் அநேகமாக, நிச்சயமாக பங்கேற்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.