செய்திகள்

ஏ.டி.எம்.களை நோக்கி படையெடுக்கும் மக்கள் - ரூபாய் நோட்டு கடும் தட்டுப்பாடு ஏன்?

டெல்லி, ஐதராபாத், போபால் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள ஏ.டி.எம்.கள் ரூபாய் நோட்டுகள் இல்லாமல் காலியாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். #CashCrunch

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லி, ஐதராபாத், போபால், வாரணாசி உள்ளிட்ட பல நகரங்களில் கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டு தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள் வெளியானது. ரூபாய் நோட்டுகள் இல்லாமல் ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கடும் அவதியடைந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

போபால் நகரங்களில் உள்ள வங்கிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரூபாய் நோட்டுகள் அளிக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். ஏ.டி.எம் குறித்த புகாரையும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாரணாசி, ஐதராபாத் நகரங்களில் கடந்த பல நாட்களாக இதே நிலை நீடிப்பதாக பலர் புகாரளித்துள்ளனர்.

இந்த விவகாரம் இன்று காலை முதல் செய்திகளாக வெளியான நிலையில், பணத்தட்டுப்பாட்டை நீக்க போதிய நடவடிக்கை எடுத்துவருவதாக பொருளாதார அமைச்சம் தெரிவித்துள்ளது. பணத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல காலதாமதம் ஆகியுள்ளது. விரைவில் பிரச்சனை சரிசெய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூபாய் நோட்டு தட்டுப்பாடுக்கு என்ன காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் வர உள்ள நிலையில், மொத்தமாக ரூபாய் நோட்டுகள் கர்நாடக வங்கி கிளைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பணம் எடுக்கும் விகிதம் டெபாசிட்டை விட அதிகமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி போதிய அளவிலான ரூபாய் நோட்டுகளை அனுப்பவில்லை என வங்கிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

பணம் எந்த பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்ற முறையான திட்டமிடல் இல்லாமை, பணம் செலவு செய்யும் வழக்கம் மக்களிடம் அதிகரிப்பு ஆகியவையும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், புதிதாக அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைக்கும் வசதி பல ஏ.டி.எம்.களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CashCrunch #TamilNews