புதுச்சேரி:
புதுவை காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரில் உழவர்கரை நகராட்சி சார்பில் இன்று தூய்மை பணி நடந்தது. மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கவும், சேதத்தை தடுக்கவும் வாய்க்கால்களில் அடைப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதை சபாநாயகர் வைத்திலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியாவது:-
சட்டப்பேரவைக்கு மத்திய அரசு நியமித்த பா.ஜனதாநியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது.
எனவே, அவர்கள் 3 பேரும் உச்சநீதிமன்றத்தை அனுகி சபை நிகழ்வுகளில் பங்கேற்க கால நீட்டிப்பு பெறலாம். சட்டமன்ற உறுப்பினர்களின் சலுகைகளுக்கும் அவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை சட்டசபைக்கு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நியமன எம்.எல்.ஏக்கள் சபை நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
இதையடுத்து ஆகஸ்டு 1-ந்தேதி சட்டசபை நிகழ்வுகளில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு செப்டம்பர் 11-ந்தேதி வரையிலான காலத்திற்கு மட்டும் எம்.எல்.ஏ அடையாள அட்டை வழங்கப்பட்டது. தற்போது அந்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் சபாநாயகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். #PuducherryAssembly #NominatedMLAs #Vaithilingam