காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி இதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி உள்ளது. தற்போது மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேகதாது விவகாரம் தொடர்பாக பேசி தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக இல்லை.