செய்திகள்

ஐகோர்ட் நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்த திட்டமா? மாநிலங்களவையில் மந்திரி பதில்

ஐகோர்ட் நீதிபதிகளின் ஓய்வு வயதை 65-ஆக உயர்த்துவதற்கு கடந்த 2010-ம் ஆண்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் மீதான அரசின் கருத்தை மாநிலங்களவையில் சட்டத்துறை இணை மந்திரி சவுத்திரி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஐகோர்ட் நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆக உள்ளது. அதை 65 ஆக உயர்த்த வேண்டும் என கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசு 114-வது அரசியல் சாசன திருத்த மசோதா தாக்கல் செய்தது. ஆனால், இந்த மசோதா நிறைவேற்றப்படாமலேயே 15-வது பாராளுமன்றத்தின் காலம் முடிந்தது.

இந்நிலையில், இந்த மசோதா மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் நீதிபதிகளின் வயதை உயர்த்தும் திட்டம் உள்ளதா என உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய சட்டத்துறை இணை மந்திரி சவுத்திரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நீதிபதிகளின் வயதை உயர்த்தும் திட்டமில்லை என கூறப்பட்டிருந்தது.

நாடுமுழுவதும் உள்ள 24 ஐகோர்ட்டுகளில் 406 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது. 3 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #TamilNews