கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. பா.ஜ.க. சார்பில் இன்று 23 தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக பா.ஜ.க.வின் எஸ்.டி., எஸ்டி, ஓ.பி.சி. மற்றும் ஸ்லம் மோர்ச்சா தொண்டர்களிடையே நமோ ஆப் வாயிலாக மோடி உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியை அவர் தாறுமாறாக விமர்சித்தார்.
‘1952ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதும், 1953ல் பந்தாரா மக்களவை தொகுதி இடைத் தேர்தலின்போதும் அம்பேத்கரை தோற்கடிக்க காங்கிரஸ் தனது அனைத்து சக்திகளையும் பயன்படுத்தியது.
அதனால்தான், அம்பேத்கர் தோல்வி அடைந்து அவமானத்தை சந்தித்தார். அம்பேத்கருக்கு மரியாதை செய்யும் வகையில் ஒரு காரியத்தையாவது காங்கிரஸ் செய்தது உண்டா என்பதை தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் இதயத்தில் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடம் இடம் இல்லை. இது பல தசாப்தங்களாக நடந்தது. காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்த வரை, அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.