செய்திகள்

நவாஸ் ஷரிப்புக்கு வெளிநாட்டு சிகிச்சை தேவை இல்லை - பஞ்சாப் மந்திரி தகவல்

நவாஸ் ஷரிப் உடல்நிலை சீரடைந்து வருவதால் வெளிநாட்டு சிகிச்சை தேவை இல்லை என பஞ்சாப் மாகாண உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். #NawazSharif

இஸ்லாமாபாத்:

பனாமா ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பும், அதை தொடர்ந்து நெஞ்சு வலியும் ஏற்பட்டது.

இதனால் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அறிவியல் மருத்துவ நிறுவன ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் சிகிச்சை பெறும் வார்டு கிளை சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடியும் வரை நவாஸ் செரீப் தங்கியிருக்கும் வார்டு கிளை சிறையாக செயல்படும் என இஸ்லாமாபாத் தலைமை கமி‌ஷனர் அறிவித்தார்.

இதற்கிடையே, இங்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதிலும் நவாஸ் ஷரிப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால்  உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு கொண்டு செல்லப்படுவார் என நேற்று தகவல்கள் வெளியாகின.

இந்த தகவலை பஞ்சாப் மாகாண உள்துறை மந்திரி ஷவுக்கத் ஜாவெத் இன்று மறுத்துள்ளார். அவர் தற்போது சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையில் மேலும் சில நாட்கள் வைக்கப்படுவார். வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

இதயம்சார்ந்த நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் பாகிஸ்தானில் அதிகம் உள்ளதால் அவரை லண்டனுக்கு கொண்டு செல்லும் அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று காலை நவாஸ் ஷரிப் உடல்நிலை தொடர்பாக இன்று காலை வெளியான மருத்துவமனை அறிக்கையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். #NawazSharif #Sharitreatment

SCROLL FOR NEXT