செய்திகள்

தகராறில் ஈடுபடும் பயணிகளுக்கான விமான பயணத்தடை விதிகள் அடுத்த மாதம் முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

தகராறில் ஈடுபடும் பயணிகளுக்கான விமான பயணத்தடை பட்டியலை அமலுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஏர் இந்தியா விமான அதிகாரியிடம் தகராறில் ஈடுபட்ட சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் அவரை தாக்கினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான பயணத்தின் போது தகராறில் ஈடுபடும் பயணிகளுக்கு 3 மாதம் முதல் வாழ்நாள் வரை பயணத்தடை விதிக்கும் வகையில் புதிய பட்டியலை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில் தெலுங்குதேசம் எம்.பி. திவாகர் ரெட்டி கடந்த வாரம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு, பிரிண்டர் ஒன்றையும் தரையில் தள்ளி விட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியதை தொடர்ந்து, புதிய பயணத்தடை பட்டியலை அமலுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த பட்டியல் குறித்த பரிந்துரைகளை பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெற்றுக்கொண்ட சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், அதை இறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இது அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்ப்பதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சக செயலாளர் ஆர்.என்.சவுபே தெரிவித்தார்.