பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றது. முதல்-மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல்-மந்திரியாக லாலு மகன் தேஜஸ்வி யாதவும் பதவி வகித்தனர்.
இதற்கிடையே, லாலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது சி.பி.ஐ. ஊழல் புகார் பதிவுசெய்தது. இதனால் தேஜஸ்வி பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும், அவர் பதவி விலகவில்லை.
இதைதொடர்ந்து, நிதிஷ்குமார் தனது முதல்-மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதன்பின்னர், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில்குமார் மோடி துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தார்.
இந்நிலையில், இன்று டெல்லி சென்ற பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.