நிதிஷ் குமார் 
செய்திகள்

மத்திய மந்திரி சபையில் 4 இடங்களை பெற விரும்பும் நிதிஷ் குமார் கட்சி

மத்திய மந்திரி சபையை விரிவாக்கம் செய்வதற்கு வசதியாக, சில மந்திரிகள் ஆளுநர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர ஏற்பாடு நடைபெற்று வருகிறது. நாளை அல்லது நாளைமறுநாள் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கு வசதியாக சில மத்திய மந்திரிகள் கவர்னர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில்போது பீகாரில் பா.ஜனதா கட்சி, நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பா.ஜனதா 17 இடங்களையும், நிதிஷ் குமார் கட்சி 16 இடங்களையும் பிடித்தன.

பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்றதால், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு தலா ஒரு இடம் கொடுக்க  முடிவு செய்தது. ஆனால் சிறிய கட்சிகளுக்கும், தங்களுடைய கட்சிக்கும் ஒரே மாதிரியான எண்ணிக்கையில் மந்திரிசபையில் இடம் வழங்குவதா? என நிதிஷ் குமார் கட்சி அதிருப்தி அடைந்து மந்திய மந்திரி சபையில் இடம்பெறவில்லை.

பீகாரைச் சேர்ந்த ஐந்து பேர் மத்திய அமைச்சராக இருக்கிறார்கள். 17 இடங்களை கொண்ட பா.ஜனதாவில் ஐந்து பேர் மந்திரிகளாக இருக்கும்போது, 16 இடங்களை கொண்ட தங்களுக்கு அமைச்சரவையில் 4 இடங்கள் வேண்டும் நிதிஷ் குமார் விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பா.ஜனதா சார்பில் 4 உயர்ஜாதியை சேர்ந்தவர்களும், யாதவ் ஒருவரும் மந்திரியாக உள்ளனர். நிதிஷ் குமார் கட்சி மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளில் மிகவும் பின்தங்கிய சமூக குரூப்பைச் சேர்ந்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்க விரும்பிகிறது  எனவும்  கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.