செய்திகள்

பீகாரைப்போல் உ.பி.யில் மது விலக்கை அமல்படுத்துங்கள்: முதல்-மந்திரிக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்

பீகாரைப் போல் உ.பி.யில் மது விலக்கை அமல்படுத்துங்கள் என்று நிதிஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலை மலர்

பீகார் மாநிலத்தின் வடக்கில் தர்பங்கா பிராந்தியத்தில் மத்திய பா.ஜனதா அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ள இருக்கிறார்.

தர்பங்கா பிராந்தியத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதியும் பா.ஜனதா வசம் உள்ளது. எனவேதான் இங்கு பா.ஜனதா சாதனை விளக்க பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில் தர்பங்காவில் நேற்று மாநில அரசு சார்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழாவை முதல்-மந்திரி நிதிஷ்குமார் நடத்தினார். இதில் ரூ.300 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பேசிய நிதிஷ்குமார், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தர்பங்கா வருகையை குறை கூறும் வகையில் மறைமுகமாக தாக்கிப் பேசினார். நிதிஷ் குமார் பேசியதாவது:-

பீகாரில் பூரண மதுவிலக்கு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதக்கீடு போன்றவற்றையும், ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொண்டு இருக்கிறேன். பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்துவதில் வெற்றி பெற்று இருக்கிறோம். இதன் மூலம் போதை அடிமையில் இருந்து மக்களை முழுமையாக மீட்டு இருக்கிறோம்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பீகார் வர இருக்கிறார். அவர் வெறுங்கையுடன் வர வேண்டாம், மதுவிலக்கு, பெண்களுக்கு 50 சதவித இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களை அமல்படுத்தி விட்டு பீகாருக்கு வாருங்கள் நான் இங்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். அதை உதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்துங்கள்.

பிரதமர் மோடி 2014 பாராளுமன்ற தேர்தலின் போதும், அடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போதும் பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார். அவற்றை அவர் நிறைவேற்றவில்லை. அதே சமயம் நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மற்றவர்கள் அதை மறந்து விட்டார்கள்.

மாட்டு சந்தைகளில் பசு பாதுகாப்பு இயக்கத்தினர் தலையிடுகிறார்கள். அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படக்கூடாது, பசுவை காப்பாற்றும் போது சட்டத்தையும் காப்பாற்றுங்கள்.