செய்திகள்

எந்த இடத்தில் விளம்பரம் ஒளிபரப்புவது என்பதுகூட தெரியாதா? - நிர்மலா சீதாராமன் கேள்வி

தூர்தர்ஷனில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை நிகழ்ச்சியின் இடையில் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டதற்கு பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #TyagarajaAradhana #Doordarshan

மாலை மலர்

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு(ஜனவரி) மாதம் 2-ந் தேதி திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா தொடங்கி 6-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பி வந்தது. இந்த நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்து, தனது பாராட்டுக்களை தூர்தர்ஷனுக்கு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் கடைசி நாளான 6-ந் தேதி(சனிக்கிழமை) 500-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆனால அன்றைய தினம் தூர்தர்ஷன் சேனலில் திடீரென தியாகராஜா ஆராதனை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விளம்பரம் ஒளிபரப்பானது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “எந்த இடத்தில் விளம்பரம் ஒளிபரப்புவது என்பதுகூட தூர்தர்ஷன் அதிகாரிகளுக்கு தெரியாதா?”, என்று கோபத்துடன் பதிவுசெய்தார்.