திருச்சி:
பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாட பொருட்கள் தமிழகத்தில் 4 மண்டலங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இது சம்பந்தமான கருத்தரங்கம் திருச்சி சங்கம் ஓட்டலில் இன்று நடைபெற்றது.
இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும் போது, தமிழகத்தில் ராணுவ தளவாட பொருட்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதனை தயாரிக்க உள்நாட்டு தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும். தேஜஸ் விமானங்களை போர் விமானங்களாக தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் ராணுவத்திற்கு தேவையான தளவாட பொருட்களை தயாரிப்பதற்குரிய மூலப்பொருட்களின் சேகரிப்பு, அவற்றை தயாரிப்பதில் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்களின் பங்களிப்பு பற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
முன்னதாக திருச்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #Tamilnews