நிர்மலாதேவி 
செய்திகள்

நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத நிர்மலா தேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மாலை மலர்

ஸ்ரீவில்லிபுத்தூர்:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் விதத்தில் செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர். இதில் பேராசிரியை நிர்மலாதேவி மனநலம் பாதித்தவர் போல் செயல்பட்டார். மேலும் மனநல சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 18-ந் தேதி விசாரணைக்கு நிர்மலா தேவி ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், மீண்டும் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் நிர்மலா தேவி கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து அவருக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.