செய்திகள்

பேராசிரியை விவகாரத்தில் காமராஜர் பல்கலைக்கழகம் நியமித்த விசாரணை குழு ரத்து- துணைவேந்தர் அறிவிப்பு

மாணவிகளை பாலியலுக்கு பேராசிரியை அழைத்த விவகாரத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நியமித்த விசாரணை குழு திரும்பப் பெறப்படுவதாக துணை வேந்தர் செல்லதுரை அறிவித்துள்ளார். #Nirmaladevi

சென்னை:

இது குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் பி.பி.செல்லதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை காமராஜர் பல் கலைக்கழகத்தை தொடர்பு படுத்தி அருப்புக்கோட்டை கல்லூரியில் நடந்த சில ஒழுக்கக்கேடான நிகழ்வுகள் குறித்து கடந்த 16-ந் தேதி பத்திரிகைகளிலும், சமூகவலைதளங்களிலும் பரவலாக செய்திகள் வெளிவந்தன.

இதன் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, இதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த சில பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களைக் கொண்ட 5 பேர் குழு அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த பல்கலைக்கழக துணை வேந்தராகிய நான் டெல்லியில் இருந்ததால், எனது ஒப்புதலுக்காக பல்கலைக்கழகத்தின் நிர்வாக பிரிவு இந்த திட்டத்தை தயாரித்தது.

இதற்கிடையில் துணை வேந்தரின் அறிக்கையின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் தமிழக கவர்னர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானத்தை உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல் நேற்று பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த அனைத்து விஷயங்களும் பாரபட்சமில்லாமல் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் பல்கலைக்கழகம் தீவிரமாக இருக்கிறது.

எனவே, பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட உள்விசாரணை குழு திரும்பப் பெறப்படுகிறது. வேந்தர் உத்தரவிட்ட ஆர்.சந்தானம் உயர்மட்ட விசாரணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பல்கலைக்கழகம் செய்யும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Nirmaladevi