நிர்மலாதேவி 
செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி இன்று ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக இன்று நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரானார்.

மதுரை:

மாணவிகளை செல்போன் மூலம் பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

இவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் ஜாமீனில் வெளிவந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த நிர்மலா தேவி திடீரென சாமி ஆடி அருள்வாக்கு கூறினார். போலீசார் வரழைக்கப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கிடையில் கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இது பற்றி விசாரித்தபோது, மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதாக தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவி உள்பட 3 பேரும் ஆஜரானார்கள். நிர்மலாதேவியின் தலைமுடி மொட்டையடித்து வளர்த்தது போல் காணப்பட்டது. இதனால் அவர் மனநல சிகிச்சை பெறுகிறாரா? என சந்தேகம் எழுந்துள்ளது.

நீதிபதி பாரி வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

SCROLL FOR NEXT