இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், லண்டனின் மேற்கு கரையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிரவ் மோடி சொகுசாக வாழ்ந்து வருவதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 3 படுக்கையறை கொண்ட வீட்டில் நிரவ் மோடி தங்கியிருப்பதாகவும், அங்கிருந்து புதிதாக வைர விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இதுதவிர நிரவ் மோடியிடம் செய்தியாளர்கள் பேசும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.