செய்திகள்

நிரவ் மோடியின் கணக்கில் உள்ள ரூ.934 கோடி வெவ்வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றம்

வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கி இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி, தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.934 கோடியை வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NiravModi #PNBFraudCase #MoneyTransferred

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பிரிட்டனில் உள்ள நிரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், நிரவ் மோடியின் மனைவி அமி, பணத்தை கையாண்ட விதம் குறித்தும், புதிய ஆதாரங்கள் குறித்தும் தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

இதில் நிரவ் மோடி, தனது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.934 கோடியினை, வெளிநாட்டில் இருந்து பராமரிக்கப்படும் மற்ற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரூ.934 கோடியில், ரூ.560 கோடி நிரவ் மோடியின் மற்றொரு வங்கிக்கணக்கிற்கும், ரூ.174 கோடியை அவரது தந்தை தீபக் மோடியின் கணக்கிலும், ரூ.200 கோடியை மனைவி அமியின் வங்கிக்கணக்கிலும் போட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #NiravModi #PNBFraudCase #MoneyTransferred

SCROLL FOR NEXT