செய்திகள்

தொடரும் டெங்கு பீதி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் டெங்கு பீதியால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு குறையாமல் உள்ளது. மாவட்டத்திலேயே அதிகமாக கடந்த 3 மாதங்களில் மட்டும் பழனியில் 19 பேர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவ-மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்குவின் தீவிரம் இப்பகுதியில் அதிகமானதை தொடர்ந்து சுகா£ரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பழனி பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகும் டெங்குவின் பீதி குறையவில்லை.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு சின்னாளப்பட்டியில் டெங்குவால் பெண் உயிரிழந்தார். மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு பரவாமல் தடுக்க, நோய் தாக்கப்பட்டவர்களுக்கு அளிக்ப்பட வேண்டியமருத்துவ சிகிச்சை ஆகியவை சுகாதாரத்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோய் தாக்காமல் இருக்க அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலவேம்பு கசாயம் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க விரைவில் உத்தரவிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.