செய்திகள்

இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்? இலங்கை-வங்காளதேசம் இன்று மோதல்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றனர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

மாலை மலர்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் கோதாவில் குதிக்கின்றன. இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலையில் உள்ளன. அதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

வங்காளதேச அணி இலங்கைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 215 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றி அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை தந்துள்ளது. மேலும் இடது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயத்தால் முதல் 3 ஆட்டங்களில் விளையாடாத அந்த அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவரே இன்றைய ஆட்டத்தில் கேப்டனாகவும் செயல்படுவார். அல்-ஹசனின் வருகையால் வங்காளதேச அணி இன்னும் உத்வேகம் அடைந்துள்ளது.

இலங்கை அணியை பொறுத்தவரை உள்ளூரில் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. மெதுவாக பந்து வீசிய புகாரில் கேப்டன் தினேஷ் சன்டிமாலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் திசரா பெரேரா அணியை வழிநடத்துவார். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.