இலங்கையில் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஆட்டம் நடைபெற்று வருகிறது. வழக்கமாக போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும். இன்று மழை பெய்ததால் ஆட்டம் 8.20 மணிக்கு தொடங்கியது. ஆட்டம் 19 ஓவராக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இலங்கை அணியில் சண்டிமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சுரங்கா லக்மல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் ரிஷ் பந்த் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார்.
குணதிலகா, குசால் மெண்டிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் இலங்கை 15 ரன்கள் சேர்த்தது. 2-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் அடித்தது. முதல் இரண்டு ஓவரில் 24 ரன்கள் அடித்தது இலங்கை.
3-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் குணதிலகா ஆட்டமிழந்தார். 8 பந்தில் 17 ரன்கள் சேர்த்த குணதிலகாவை ரெய்னா அபாரமாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.
அடுத்து வந்த குசால் பேரேராவை வாஷிங்டன் சுந்தர் 3 ரன்னில் வெளியேற்றினார். ஒருபுறம் இரண்டு விக்கெட்டுக்கள் வீழந்தாலும் மறுமுனையில் குசால் மெண்டிஸ் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் 31 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஐந்து போட்டியில் 4-வது அரைசதம் இதுவாகும்.
தொடர்ந்து விளையாடிய அவர் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அத்துடன் இலங்கையின் ஸ்கோர் தள்ளாட ஆரம்பித்தார். இந்தியா கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீச இலங்கை 19 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.