செய்திகள்

தவான் அதிரடியால் இலங்கைக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா

கொழும்பில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் தவான் அதிரடியால் இலங்கைக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #NidahasTrophy

மாலை மலர்

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ரன் எடுத்த நிலையில் நுவான் பிரதீப் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. மணிஷ் பாண்டே நிதானமாக விளையாட தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 30 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 12 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

இந்தியாவின் ஸ்கோர் 12.4 ஓவரில் 104 ரன்னாக இருக்கும்போது மணிஷ் பாண்டே 37 ரன்களில் (35 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸ்) ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டேவை அடுத்து ரிஷப் பந்த் களம் இறங்கினார். அரைசதம் அடித்த தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ரிஷப் பந்தால் அதிரடியாக விளையாட முடியவில்லை.

18-வது ஓவரின் கடைசி பந்தில் தவான் 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் 49 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சர்களுடன் இந்த ரன்னை எடுத்தார். 5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் இரண்டு பவுண்டரியும், ரிஷப் பந்த் ஒரு பவுண்டரியும் அடித்து, கடைசி பந்தில் ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு  174 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 6 பந்தில் 13 ரன்கள் சேர்த்தார்.