செய்திகள்

புத்த கயா குண்டு வெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயாவில் கடந்த 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட 5 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாலை மலர்

பாட்னா:

உலகப் புகழ்பெற்ற புத்த கயா பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், பலர் காயமடைந்தனர். புத்த மதத் துறவிகள், வெளிநாட்டுப் பயணிகள் என பலர் அவர்களில் அடங்குவர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. அந்த அமைப்பின் 5 பேர் கைது செய்து விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள்தான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் என்பது உறுதியானது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் 5 பேரையும் குற்றவாளிகள் என கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.