செய்திகள்

தீவிரவாதத்திற்கு நிதியுதவி: ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தலைவரின் மகன் அதிரடி கைது

தீவிரவாத தாக்குதல்களுக்கு நிதியுதவி பெற்ற புகாரின் கீழ் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தலைவர் சையது சலஹுதீனின் மகன் சையது ஷாஹித் யூசுப் தேசிய புலனாய்வு அமைப்பினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தேசிய புலானாய்வு அமைப்புனர் (என்.ஐ.ஏ) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்கள் வீட்டில் சில அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் முக்கிய தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாகிதீனின் தலைவர் சையது சலஹுதீனின் மகன் சையது ஷாஹித் யூசுப் டெல்லியில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு யூசுப் மீது பதிவு செய்யப்பட்ட தீவிரவாத நிதியுதவி வழக்கின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2011-ம் ஆண்டு முதல் 2014 வரை சிரியாவில் உள்ள முகம்மது பாட் என்பவரிடமிருந்து யூசுப் கணக்குக்கு பணம் வந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட யூசுப் டெல்லில் உள்ள என்.ஐ.ஏ தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

காஷ்மீரில் நிலவும் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக முன்னாள் உளவுத்துறை அதிகாரி தினேஷ்வர் ஷர்மா நேற்று சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.