செய்திகள்

குஜராத்: புதிதாக தேர்வான எம்.எல்.ஏ.க்கள் 23-ம் தேதி பதவியேற்பு

குஜராத் மாநிலத்தின் சட்டசபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வரும் 23-ம் தேதி பதவியேற்று கொள்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

இதைத்தொடர்ந்து, முதல் மந்திரி விஜய் ரூபானி தலைமையிலான புதிய மந்திரிசபை கடந்த 26-ம் தேதி பதவியேற்றது. காந்திநகர் சச்சிவாலயா திடலில் காலை 11 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் இதர மாநிலங்களை சேர்ந்த பா.ஜ.க. முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், குஜராத் சட்டசபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம் எல் ஏக்கள் வரும் 23-ம் தேதி பதவியேற்று கொள்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், சட்டசபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம் எல் ஏக்களுக்கு வரும் 23-ம் தேதி காந்தி நகரில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

14-வது சட்டசபை தொடரின் முதல் அமர்வில் சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார். அடுத்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் குஜராத் சட்டசபையின் முதல் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.