செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: கிழக்கு கடற்கரை சாலை - மெரீனாவில் பாதுகாப்பு

இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதையொட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மெரீனா பகுதிகளில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மாலை மலர்

சென்னை:

இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதையொட்டி சென்னையில் உள்ள கடற்கரையில் கொண்டாட்டம் களைகட்டும். அங்கு திரளும் இளைஞர்கள் புத்தாண்டை வரவேற்று மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடும். மேலும் நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து கடற்கரை பகுதிகளில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மெரீனா கடற்கரையில் கூட்டத்தை கண்காணிப்பதற்காக கோபுரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

உற்சாக மிகுதியில் யாராவது கடலுக்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை நகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டினர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க 368 இடங்களில் வாகன தணிகை செய்யப்படுகிறது.

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இதையடுத்து கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம், கடப்பாக்கம், நெம்மேலி, பூஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். அங்கு 121 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தணிக்கை நடத்தி வருகிறார்கள்.

ஓட்டல்கள், ரிசார்ட்டுகளுக்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.

மாமல்லபுரம் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பகுதிகள் அதிகம் கூடும் இடமான கடற்கரை, கோவில் அருகே கடற்கரையையொட்டி தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு உள்ளது.

பழவேற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடையை மீறி செல்லும் படகோட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.