செய்திகள்

டிரைவிங் லைசென்சுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு திட்டம்- போக்குவரத்து துறையில் 2 மாதத்தில் அறிமுகம்

டிரைவிங் லைசென்சு, ஆர்.சி.புத்தகம் போன்றவற்றை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க போக்குவரத்து துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் 2 மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. #DrivingLicence #Tamilnadu

போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களையும், வாகன உரிமையாளர்களையும் முறைப்படுத்தும் நடவடிக்கையை தமிழக போக்குவரத்துதுறை மேற்கொண்டு வருகிறது.

சாலை விபத்துகளை குறைக்கவும், விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சாலை போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் படிப்படியாக மேற்கொள்ளப்படுகிறது.

டிரைவிங் லைசென்சு, ஆர்.சி.புத்தகம் போன்றவற்றை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

இதுவரையில் காகிதமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த 2 முக்கிய ஆவணங்களும் இன்னும் ஓரிரு மாதங்களில் கிரெடிட் கார்டு போன்று கையில் தழுவ உள்ளது.

கையடக்க இந்த ஸ்மார்ட் கார்டில் வாகனங்கள் குறித்த அனைத்து தகவல்கள் மட்டுமின்றி, அதன் உரிமையாளர் குறித்த முழு விவரங்களும் இடம் பெறும்.

“லைசென்சு” சஸ்பெண்டு செய்யப்பட்டது, அபராதம் விதிக்கப்பட்டது குறித்த தகவல்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும். வாகனங்களை புதுப்பிக்கும்போது இக்கார்டினை கொண்டு வந்தால் போதுமானது. அதில் உள்ள ‘ஜிப்’ மூலம் அந்த வாகனத்தின் ஆயுட் காலம் புதுப்பிக்க வேண்டிய காலம் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

டிரைவிங் லைசென்சுக்கு ஒரு ஸ்மார்ட் கார்டும். பதிவு ஆவண சான்றிதழுக்கு (ஆர்.சி.) ஒரு ஸ்மார்ட் கார்டும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த கார்டில் எல்லா தகவல்களும் இடம் பெறும். ‘பார்கோடு’, புகைப்படம் போன்றவை கார்டில் இடம்பெறும். பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் கார்டை வட்டார போக்குவரத்து அலுவலர்களும் போலீசாரும் ஆய்வு செய்யலாம்.

‘பார்கோடினை’ பார்த்தாலே வாகனங்கள் குறித்தும் உரிமையாளர் பற்றிய தகவல்களும் தெரியவரும்.

இனி புதிதாக டிரைவிங் லைசென்சு மற்றும் வாகனங்கள் பதிவு செய்யக் கூடியவர்கள் நவீன ஸ்மார்ட் கார்டினை பெற முடியும். ஏற்கனவே பழைய முறையில் ஆவணங்களை வைத்திருப்பவர்களும் இதற்கான கட்டணம் செலுத்தி புதிய கார்டினை பெறலாம்.

நாடு முழுவதும் இந்த ஸ்மார்ட் கார்டினை பயன்படுத்தலாம். முறைகேடு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் காண முடியும்.