செய்திகள்

விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்பு: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

புதிய மின் இணைப்புகள் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து மின்சார துறை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அப்போது, புதிய மின் இணைப்புகள் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று கூறினார். இது வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மட்டும் பொருந்தும் என்றார். 

மேலும் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:- 

தமிழகத்தில் மின் தடைகள் கிடையாது. 2 ஆண்டுகளாக தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் மின் நிலையங்களில் பாராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருசில டிரான்ஸ்பார்களில் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் தடையை ஒன்றும் செய்ய முடியாது. 3000 மெகாவாட் மின்சாரம் உபரியாக உள்ளது.

கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கு முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் தொடர்ந்து வைத்து வருகிறோம். 

மின் இணைப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் இணைப்புகள் வழங்கப்படும். "மின்சார நண்பன்" திட்டத்தின் படி மின் தடை குறித்து ஒரு நாள் முன்கூட்டியே நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

இவ்வாறு தெரிவித்தார்.